விமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் - சீமான் எச்சரிக்கை
மதுரை: விமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சென்னை உட்பட மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும், அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும் இயங்கி வருகின்றன. இதில் தமிழர்களே பெரும்பாலும் பயணம் செய்து வருகின்றனர். தமிழர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.
ஆனால் இந்த விமான சேவைகள் எதிலும் மருந்துக்கு கூட தமிழ் இல்லை. அறிவிப்புகள், பயணிகளை வரவேற்கும் வரவேற்புகள் என அனைத்தும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே உள்ளது.
விதிவிலக்காக ஓரிரு தனியார் விமான சேவையில் மட்டும் சில நேரங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படு வருகின்றன.
தமிழர்களை வைத்து வருவாய் ஈட்டும் இந்த நிறுவனங்கள் தமிழை இழிவுபடுத்தும் விதமாக தமிழைப் புறக்கணிப்பது கடும் கண்டத்திற்கு உரியது.
எனவே, உலகெமெங்கும் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் விமானங்கள் ஆகியன குறித்த அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். அத்துடன் தமிழ் நாளிதழ்களை பயணிகளுக்கு அளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர்களை ஒன்று திரட்டி இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.