ஸ்பெக்ரம் ஊழல்: திமுக, காங்கிரஸ் கூட்டை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்-என்.வரதராஜன்
பெரியகுளம்: ஸ்பெக்ட்ரம் உழல் விவகாரத்தில் திமுக - காங்கிரஸுக்கு உள்ள பங்களிப்பை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.
பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என். வரதராஜன் கலந்துகொண்டு பேசியதாவது,
தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றது. உதாரணமாக குழந்தைகளை பாதிக்கும் போலி மருந்து, தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளை, வேலை உறுதித் திட்டத்தில் பெரும் கொள்ளை, உள்ளாட்சி மன்றங்களில் கமிஷன் என கூறிக் கொண்டே போகலாம்.
தமிழகத்தில் நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என கருணாநிதி தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிப்படி இதுவரை எத்தனை பேருக்கு நிலம் வழங்கயுள்ளார்? அனைவருக்கும் நிலம் வழங்குது சாத்தியாமாகாது என்பதை தெரிந்தே வெளியிட்டார்.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். போதாக் குறைக்கு திமுக அரசு தம் பங்கிற்கு வரியைப் போட்டு மக்களை வேதனைப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சீரான தொழிற் வளர்ச்சி இல்லை. சீரான ஊதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் இவற்றால் நாட்டு நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்கள் இருளில் தவிக்கின்றதன.
ஆளும் திமுகவிடம் அதிகார பலமும், தொலைக்காட்சி பலமும் இருக்கலாம். ஆனால் அந்த ஆளுங்கட்சியின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தும் பலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தான் உள்ளது.
எனவே மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.