அருந்ததியர் இட ஒதுக்கீடு: கண்காணிக்க குழு-கருணாநிதி உத்தரவு
சென்னை: அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.
இந்த இட ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.
இந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications