ஜேபிசி விசாரணை அவசியம் என்பதில் முரண்பாடில்லை-ஆனால் பிஏசிக்கு அதிகாரம் அதிகம்-ஜோஷி
டெல்லி: ஒரு பாஜக தலைவராக, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரிக்க வேண்டும் என்ற கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். அதேசமயம், பொதுக் கணக்குக் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் அந்தக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன என்பதையும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் முரளி மனோகர் ஜோஷி.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஜோஷி தெரிவித்த கருத்துக்களால் பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கத்காரியை, ஜோஷி சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், பாஜக உறுப்பினராக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற கருத்தில் நிலையாக, உறுதியாக உள்ளேன். ஜேபிசி மூலம் மட்டுமே இந்த விவகாரத்தின் உண்மையான அளவு, ஊழலின் அளவு தெரிய வரும். அதில் சந்தேகமே இல்லை.
அதேசமயம், பொதுக் கணக்குக் கமிட்டியின் தலைவர் என்ற முறையில், அதற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. கமிட்டியின் தலைவர் என்ற பொறுப்பில் முழமையாக ஈடுபடுவதிலும் நான்உறுதியாக உள்ளேன் என்று கூறியுள்ளார் ஜோஷி.