கடலிலிருந்து கிளம்பிய மர்ம சத்தம்-நாகை மக்கள் பீதி
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட கடல் பகுதியில், கடலிலிருந்து பெரும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்தனர். அந்தப் பகுதிக்கு கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை கப்பல்கள் விரைந்துள்ளன.
நேற்று இரவு நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராம மக்கள் கடலிலிருந்து பயங்கர சத்தம் வந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். காதைக் கிழிக்கும் வகையில் அந்த சத்தம் மிக பலமாக இருந்தது. இதனால் மக்கள் குழப்பமடைந்து என்னவோ, ஏதோ என்று பயந்தனர்.
கடலைப் போய்ப் பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்புப் போலீஸாரும் வந்தனர். அதேசமயம், கடலோரக் காவல் படையின் ரோந்துப் படகும், கடற்படையின் சிறிய ரக கப்பலும் சத்தம் வந்த திசை நோக்கி சென்றதை மக்கள் பார்த்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் கூறுகையில், எதனால் இந்த சப்தம் வந்தது என்பது தெரியவில்லை. வெடிகுண்டு வெடித்து அதனால் வந்த சத்தமா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. தற்போது அங்கு ஒரு குழு சென்றுள்ளது. அது திரும்பி வந்த பிறகுதான் காரணம் தெரிய வரும் என்றார்.












Click it and Unblock the Notifications