காவல் நிலையங்கள் 3 ஆக தரம் பிரிப்பு: 2013ல் பணிகள் முடியும்
நாகர்கோவில்: காவல் நிலையங்களை சிறிய, நடுத்தரம் மற்றும் உயர்நிலை என்று மூன்றாக தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் தனியாக பட்டாலியன் உருவாக்குதல், சப் டிவிஷன்கள் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. காவல் நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்களால் காவல் நிலைய பணிகளில் பாதிப்பு இல்லை.
சிறப்பு எஸ்ஐக்களும் ரோந்து, பீட் பணிகளை கவனிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. சிறிய காவல் நிலையங்கள் 30 காவலர்களை கொண்டதாக செயல்படும்.
நடுத்தர காவல் நிலையங்களில் 50 பேரும், உயர்நிலை காவல் நிலையங்களில் 80 காவலர்களும் இருப்பர். இதற்காக எஸ்பிக்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு காவல் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களை தரம் பிரிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சில காவல் நிலையங்களில் குறைந்தபட்சமாக 16 காவலர்கள் உள்ளனர். அது 30 பேராக நிர்ணயம் செய்யப்படு்ம். இந்த தரம் பிரிப்பு நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
தற்போது நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக தென்மண்டல அளவில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். புதிய காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு வருபவர்கள் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கன்னியாகுமரியில் சுற்றுலா போலீஸ் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications