ஜன. 7 முதல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கரூர்: அரசு மணல் குவாரிகளில் எந்திரங்கள் மூலம் மணல் அள்ள தடை விதித்திருப்பதை கண்டித்து வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர். முனிரத்தினம் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மணல் குவாரிகளில் எந்திரங்கள் மூலம் தான் மணல் லாரிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மணல் குவாரிகளில் எந்திரங்கள் மூலம் மணல் அள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், குவாரிகளில் தொழிலாளர்கள் மூலம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்று உத்தரவி்டுள்ளனர்.
தொழிலாளர்கள் மூலம் மணல் லாரிகளில் நிரப்பி விநியோகம் செய்யும்பட்சத்தில் தமிழகம் முழுவதும் மணல் விலை கடுமையாக உயரும். அதன் மூலம் கட்டுமான தொழில் பாதிக்கப்படும்.
30. 9. 2010 அன்றைய தேதிக்கு முன்பு எந்திரங்கள் மூலம் மணல் ஏற்றும் போதே சென்னையில் 2 யூனிட் மணல் விலை ரூ. 4 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது 2 யூனிட் மணல் விலை ரூ. 18 ஆயிரமாக உள்ளது.
இதன் காரணமாக, அரசு மணல் குவாரிகளில் தொழிலாளர்கள் கிடைக்காமல் சுமார் 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அரசு மணல் குவாரிகளில் எந்திரங்கள் மூலம் மீண்டும் மணல் அள்ள உத்தரவிட வேண்டும். இல்லையெனில் வரும் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 5 நாட்களாக கரூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் போன்ற பகுபதிகளில் உள்ள அரசு மணல் குவாரிகளில் லாரிகள் மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டன.
இது குறித்து சில லாரி அதிபர்களிடம் விசாரித்த போது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும் மாநிலத்தில் உள்ள திமுக அரசுக்கும் மெளன யுத்தம் நடைபெற்று வருகின்று. கடந்த 4 வருடமாக ஆற்றில் எந்திரம் மூலம் மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த உத்தரவு பல்வேறு விதமான சந்தேக அலைகளை ஏற்படுத்தியுள்ளனது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications