தப்பு கணக்கு போடுகிறது-திமுக அரசை மக்கள் தூக்கி எறிவர்: ஓ.பன்னீர்செல்வம்
கிருஷ்ணகிரி: இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை வைத்து கருணாநிதி குடும்பத்தினர் வெளிநாட்டுத் தீவுகளை வாங்கியுள்ளனர். வரும் தேர்தலில் வென்று விடலாம் என திமுக தப்புக் கணக்கு போட்டு வருகிறது, ஆனால் மக்கள் திமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,
தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்பவர்கள் இது குறி்த்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் கருணாநிதி குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு ஒரு கோடிக்கு மேல் சொத்து விற்கப்பட்டாலும், உரிமையாளர்களை மிரட்டி அந்த சொத்துக்களை கருணாநிதி குடும்பத்தினர் வாங்கிவிடுகின்றனர். இவ்வாறு மிரட்டிக் குவித்த பணத்தை தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களர்களுக்கு கொடுத்து திமுக வெற்றி பெற்றது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டிய பெரிய தொகையை வாக்காளர்களுக்கு கொடுத்து ஓட்டு வாங்கி மீண்டும் பதவியைப் பிடித்துவிடலாம் என்று திமுக தப்புக் கணக்கு போட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மின்வெட்டால் கொங்கு மண்டலத்தில் 10 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர். விஷமாய் அதிகரித்துள்ள பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீரழிந்து குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசை மக்கள் வரும் தேர்தலில் தூக்கி எறிவர் என்றார்.












Click it and Unblock the Notifications