சிபிஐ ரெய்டுக்குள்ளான தமிழ் மையத்துடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை அரசு நடத்துவதற்கு எதிராக வழக்கு
சென்னை: சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இதைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சமீபத்தில் சிபிஐ சோதனைக்குள்ளானது தமிழ் மையம் என்ஜிஓ அமைப்பு. இந்த நிலையில் அரசு அல்லது அரசு சார்பிலான எந்தத் துறையும் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அது சிபிஐ நடத்தி வரும் விசாரணையைப் பாதிப்பதாக அமையும். மேலும், சிபிஐயின் தீவிர கண்காணிப்பில் உள்ள ஒரு அமைப்புடன் இணைந்து செயல்பட்டால், அந்த அமைப்புக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தருவது போல மாறி விடும்.
மேலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மக்களின் வரிப்பணமும் செலவிடப்படுகிறது. எனவே, சிபிஐயின் கண்காணிப்பில் உள்ள அமைப்புக்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடுவது தவறாகும்.
தமிழ் மையம் அமைப்பில் டிசம்பர் 15ம் தேதி நடந்த சோதனையின்போது பல சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனவே தமிழ் மையம் அமைப்புடன் அரசு இணைந்து செயல்படக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications