ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு-தெலுங்கானாவில் இன்று பந்த்
ஹைதராபாத்: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு இன்று தெலுங்கானா பிராந்தியத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டதும் சந்திரசேகர ராவ் தலைமையில் கூடிய போராட்டக் குழுக் கூட்டத்தில் தொடர் போராட்டங்கள் குறித்து அப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று முதலில் பந்த் நடத்தவுள்ளனர்.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கமிட்டிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது அவர்களைத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மாணவர் புறக்கணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நாள்தோறும் மதிய உணவு இடைவெளியின்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜனவரி 10 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், 17 ம் தேதி சாலை மறியலில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று பந்த் நடத்தப்படவுள்ளதால் தெலுங்கானா பகுதியில் புற ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்து பல பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications