திண்டிவனம் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை-திமுகவினர் மீது ஜெ குற்றச்சாட்டு!
திண்டிவனம்: திண்டிவனம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ளது நகர் என்ற கிராமம். இந்த கிராமத்தின் ஊராட்சி ஒன்றித் தலைவராகவும், அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்தவர் பிரகாஷ்.
இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி, சேலை பண்டல்களை தனது ஊருக்கு அனுப்பிவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்தில்யே இறந்தார்.
இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகளும் , தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
தகவலறிந்த, பிரம்மதேசம் காவல்நிலைய போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெண்டர் எடுப்பதில் பிரகாசுக்கும், மற்றொரு தரப்புக்கும் மோதல் இருந்ததாகவும் அதனால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
திமுகவினரால் கொலை-ஜெயலலிதா:
இந்தக் கொலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், நகர் கிளைக்கழகச் செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான ஆர்.பிரகாஷ் தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுகவினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
இந்தப் படுகொலைக்குக் காரணமான திமுகவினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் பிரகாஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications