பண மோசடி வழக்கு: விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்
விளாத்திகுளம்: அருப்புக்கோட்டை நீதிமன்றம் பண மோசடி வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவைச் சேர்ந்த எல்ஐசியி்ல் வேலை பார்க்கும் செல்வராஜ், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். வாங்கிய கடனுக்காக வங்கி காசோலையை கண்ணனிடம் இருவரும் கொடுத்தனர்.
அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு வங்கியில் காசோலையை கண்ணன் மாற்ற முயன்றபோது இருவரது வங்கி கணக்கிலும் பணம் இல்லையென காசோலை திரும்பி வந்தது. இது குறித்து கண்ணன் அருப்புகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கண்ணன் பணம் கேட்டு மிரட்டுவதாக அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கண்ணனிடம் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற ராஜமன்னார் இடமாற்றம் செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவ்வழக்கில் ஆஜாராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கணபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications