'இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை... பெரியார்': உலக நாத்திகர் மாநாட்டில் வீரமணி பேச்சு

திராவிடர் கழகம், நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து திருச்சி சுந்தர்நகர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உலக நாத்திகர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மாநாட்டின் நோக்கம் பற்றி விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குனர் முனைவர் விஜயம் விளக்கினார். நார்வே நாட்டின் அனைத்துலக மனிதநேய நன்னெறி கூட்டமைப்பு முன்னாள் தலைவர் லெவி பிராகல் மாநாட்டை தொடங்கி வைத்தார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் குமரேசன் வரவேற்றார்.
அமெரிக்க நாட்டின் பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குனர் இளங்கோவன், சிங்கப்பூர் ரத்னகுமார், மலேசிய திராவிடர் கழக தலைவர் அன்பழகன் உள்ளிட்டோரும் பேசினர்.
பின்னர் கி.வீரமணி பேசுகையி்ல், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி 85 ஆண்டுகள் ஆகின்றன. மதத்தின் பெயரால் நிலவி வந்த மூட நம்பிக்கைகளை ஒழித்து மனிதாபிமானம் வளர சுயமரியாதை இயக்கம் பெரிதும் உதவியது. இது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை.
பெரியார் சுயமரியாதை கருத்துக்களை பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. ஒரு செருப்பு வந்து விழுந்தால் பெரியார் ஒரு செருப்பினால் பலன் இல்லை. இன்னொரு செருப்பையும் வீசு என கூறினாரே தவிர பிரசாரத்தை கைவிடவில்லை. பெரியார் அத்தகையை கொள்கை வீரராக இருந்ததால்தான் இன்று சிலையாக நிற்கிறார்.
திராவிடர் கழக மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் தான் பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு இருக்கின்றன என்றார்.
தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன் பேசுகையில், பெரியாரின் தொலைநோக்கு சமூக சீர்திருத்த கருத்துகள் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் பெரியாரின் வழித்தோன்றல்களான அண்ணாவாலும், முதல்வர் கருணாநிதியாலும் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
சுயமரியாதை திருமண சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு ஆகிய முற்போக்கான சட்டங்களும், திட்டங்களும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.85 ஆயிரத்து 344 கோடியில் 43 சதவீதம் சமூக நல திட்டங்களுக்காகவும், சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காகவும் செலவிடப்படுகிறது என்றார்.
மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு வருகிற 9ம் தேதி வரை நடைபெறும்.
மாநாட்டில் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி திறந்து வைத்தார்.
மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications