மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பிரச்சினை-தீர்வு காண தலைமைச் செயலர் தலைமையில் கமிட்டி
சென்னை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் பதவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தீர்ப்பதற்கு தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி. மிகத் தரமான கல்வியை மட்டும் தராமல், வாழ்க்கைப் பாதையை மாணவர்கள் திட்டமிடுவதற்குத் தேவையான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வி நிறுவனம் அமெரிக்கன் கல்லூரி. இன்று இக்கல்லூரி அத்தனை பேரின் கண்களிலும் வேடிக்கைப் பொருளாக மாறி நிற்கிறது.
கல்வியாளர்கள் வட்டாரத்தில் அமெரிக்கன் கல்லூரியில் சமீப ஆண்டுகளாக வெடித்துக் கிளம்பியுள்ள சர்ச்சைகள் பெரு்ம் கவலை அலைகளைப் பரப்பியுள்ளது. அனைவருக்கும் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கன் கல்லூரியிலேயே பிரச்சினை என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
மதுரை-ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்புக்கும், அமெரிக்கன் கல்லூரி முதல்வர்-செயலர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் கல்லூரியை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக போராட்டங்கள், ஸ்டிரைக் உள்ளிட்டவை நடந்து விட்டன. கல்லூரிக்குள் போலீஸார் புகுந்த சம்பவமும் நடந்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்களையும், பழைய மாணவர்களையும் மன வருத்தத்திற்குள்ளாக்கி விட்டது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியை, கல்லூரியின் பழைய மாணவரும், பேராசிரியரும், பிரபலமான பட்டிமன்றத் தலைவருமான சாலமன் பாப்பையா சந்தித்து பிரச்சினை குறித்து விளக்கினார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் ஒரு குழுவை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை-அமெரிக்கன் கல்லூரி பிரச்னை குறித்து அரசுக்கு வந்துள்ள முறையீடுகளை அடுத்து, சம்பந்தப்பட்டவர்களோடு கலந்து ஆலோசனை செய்து சுமுகமாகத் தீர்வு காண, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் க.கணேசன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications