மேலும் 10 லட்சம் இலவச டிவிக்களை வழங்க அரசு திட்டம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகள் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட சட்டமன்றக்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 21வது கூட்டம் இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா (காங்.), அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), ரவிகுமார் (விடுதலை சிறுத்தைகள்), சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவுகள்:
2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2006 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதுவரை ஐந்து கட்டங்களில் 1 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை ஏறத்தாழ 1 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் வழங்கப் படுவதற்காக கூடுதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவை என அளித்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, இதுவரை வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கிட நடப்பாண்டில் 6-ம் கட்டமாக மேலும் 10 லட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications