ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
டெஹரான்: ஈரானைச் சேர்ந்த 105 பேருடன் சென்ற போயிங் விமானம், விபத்தில் சிக்கி மூன்று துண்டாக உடைந்து விழுந்தது. இதில் 72 பேர் இறந்தனர்.
இந்த விமான விபத்துக்கு அமெரிக்காவையும் ஒரு காரணமாகக் கூறலாம். ஈரான் மீது அடுக்கடுக்காக பல்வேறு தடைகளைப் போட்டு வைத்திருக்கிறது அமெரிக்கா. குறிப்பாக ஈரான் விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தர அது மறுத்து வருகிறது. மற்ற நாடுகளையும் கூட கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது.
தற்போது விபத்துக்குள்ளான ஈரான் விமானம் போயிங் 727 ரக விமானமாகும். இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதாக கருதப்பட்டாலும் கூட என்ஜின் பழுதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து குறித்து ஈரான் செம்பிறைச் சங்க துணைத் தலைவர் ஹைதர் ஹெயாத்ரி கூறுகையில், விமானத்தில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
அதேசமயம் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மேற்கு அஜர்பைஜான் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருமியா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.45 மணிக்கு விபத்து நடந்துள்ளது.
டெஹரானிலிருந்து ஒருமியாவுக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. ஒருமியாவை நெருங்கியபோது திடீரென விமானம் தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்தது. அதன் பின்னர் அது மூன்று துண்டாக உடைந்து விழுந்து நொறுங்கியது. இருப்பினும் விமானம் தீப்பிடிக்கவில்லை. இதனால் அனைவரும் உயிரிழக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானம் மூன்று துண்டாக உடைந்து சிதறி விழுந்ததை கிராமத்தினர் நேரில் பார்த்துள்ளனர். விமானம் விழுந்ததும் சில பணிகள் காயத்துடன் தாங்களாகவே வெளியேறி வந்துள்ளனர். அவர்களை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கடும் பனி கொட்டி வருவதால் மீட்புப் பணிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக ஈரான் விமானத்துறை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நவீன விமானங்களை வாங்க முடியாமல், பழைய விமானிகளை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் ஈரான் விமானங்கள் போதிய பாதுகாப்பில்லாமல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தற்போது வைத்துள்ள பெரும்பாலான பயணிகள் விமானங்கள் அறுதப் பழசானவை. முறையான பராமரிப்பும் இல்லை.
கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதுதான் அந்த நாட்டில் நடந்த மிகப் பெரிய விபத்தாகும். அந்த விபத்தில் இருந்த அனைவரும் ஈரான் புரட்சிப் படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கு.
அதேபோல கடந்த 2009ம் ஆண்டு சோவியத் நாட்டுத் தயாரிப்பான டுபலோவ் என்ற விமானம் நடு வானில் தீப்பிடித்து விழுந்தது. இதில் 168 பேர் உயிரிழந்தனர்.
2005ம் ஆண்டு டிசம்பரில் டெஹ்ரான் அருகே குடியிருப்புகளின் மீது வி்மானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 2006ம் ஆண்டு நடந்த ராணுவ விமான விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் தொடர்ந்து விமானங்கள் விபத்துக்குள்ளாகி தொடர் உயிரிழப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் கைதான அமெரிக்க உளவாளி விடுதலை?
இதற்கிடையே, ஈரானில் உளவு பார்த்துக் கைதாகி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அமெரிக்க உளவாளி ஹால் என்ற 55 வயது அமெரிக்கப் பெண்மணி ஆர்மீனியா நோக்கி செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹால், அமெரிக்காவுக்காக ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் இவர் பிடிபட்டார். ஈரான்-ஆர்மீனிய எல்லைப் பகுதியில், முறையான விசா இல்லாமல் ஈரான் பகுதிக்குள் நுழைந்தபோது இவர் கைது சதெய்யப்பட்டார். அவரிடம் உளவு பார்ப்பவர்களுக்குரிய சில சாதனங்கள் இருந்ததாக ஈரான் தெரிவித்தது. அவரது பல்லில் மைக்ரோபோன் இருந்ததாகவும் ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், ஆர்மீனியாவுக்கு அவர் சென்றிருக்கலாம் என்றும் நேற்று ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், சனிக்கிழமையன்று பேட்டி அளித்த எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படைப் பிரிவின் துணைத் தலைவர் அகமது கெராவந்த் கூறுகையில், கைதான பெண்ணுக்கு 34 வயதாகும். அவரிடம் முறையான விசா இல்லாததால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு வீடியோ கேமரா இருந்தது. டிசம்பர் 5ம் தேதி இவரைக் கைது செய்தோம். அவர் ஒரு ரகசிய சிஐஏ ஏஜென்ட் ஆவார். உளவு பார்க்கவே தான் வந்ததாக அவர் கூறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் இந்தப் பெண் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என்று அமெரிக்காவும், அப்பெண் ஆர்மீனியாவுக்குள் வந்ததாகத் தெரியவில்லை என்று அந்த நாடும் கூறியுள்ளதால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications