நாம் எதிர்க்கும் எதிரி சகலகலாவல்லவன், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்-பண்ருட்டி ராமச்சந்திரன்
சேலம்: நம் முன் நிற்கும் எதிரி சகலகலாவல்லவன். எனவே நாம் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
நேற்று சேலத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் எங்கெங்கோ சுற்றிச் சுற்றிப் பேசி கடைசியில் யாருக்கும் புரியாமலேயே தனது பேச்சை முடித்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பளிச்சென பேச்சை ஆரம்பித்து திருத்தமாக பேசி முடித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சு
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினர் அட்டையே இல்லாமல் தேர்தலை சந்தித்தவர்கள் நாங்கள். ஆனால், நாங்கள் அழிந்து விடுவோம் என்று கூறினார்கள். மாறாக பட்டுப் போகாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.
71வது கட்சி என்று நம்மை ஏளனம் செய்தார்கள். ஆனால் மற்ற 70 கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்று முதல் கட்சியாக நாம் மாறி நிற்கிறோம்.
முன்னாள் காவல்துறை அதிகாரியின் குடும்பத்தையே வெட்டிக் கொன்றனர் இந்த ஊரில்.அப்படிப்பட் படு பாதகர்கள், ரவுடிகள் நிறைந்திருக்கும் ஊரில் இன்று மாநாட்டை நடத்தி வருகிறோம். நம்மால் மட்டுமே இதை நடத்த முடியும் என்று நம்மை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
நாங்கள் ரெளடி ராஜ்யத்தை அழிப்பதற்காக சூளுரை எடுத்துள்ளோம்.
லஞ்சம் கொடுத்தால்தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலையுள்ளது. காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுத்தால் அங்கு ஆளுங்கட்சிக்காரன் தலையீடு உள்ளது. சரி, மக்களால் சுதந்திரமாகவாவது வாக்களிக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூட முடியவில்லை. எனவே, மக்களை மீட்கும் கடமை நமக்கு உள்ளது.
நாம் எதிர்க்கும் எதிரி, சாமானியன் அல்ல. சகலகலா வல்லவர். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய தலையாய கடமையே இம்மாநாட்டின் நோக்கம் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications