விதிகள் மீறப்பட்டது தெரிந்தும் ட்ராய் என்ன செய்து கொண்டிருந்தது? - உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற 11 முக்கிய நிறுவனங்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் ட்ராய் மெத்தனம் காட்டியது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2 ஜி உரிமங்கள் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்துள்ளதால், அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என ஜனதா கடசித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இன்னொரு வழக்கு, அடிப்படை விதிகளை மீறி ஒதுக்கீடு பெற்ற 11 நிறுவனங்களின் 2 ஜி உரிமங்களை ரத்து செய்ய் வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ஜிஎஸ் சாங்வி மற்றும் ஏ கே கங்குலி அடங்கி பெஞ்ச் முன்பு இன்று காலை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதில் சுப்ரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், அனைத்து லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு மத்திய அரசுக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிபதிகள். இன்னொரு பொது நல வழக்கில், விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.
வோடஃபோன், டாடா, யுனிநார், வீடியோகானுக்கு நோட்டீஸ்...
இதில் வோடஃபோன், யூனிநார், எஸ்ஸார் சவுத், ஷ்யாம் டெலிலிங்க், டாடா டெலி சர்வீஸஸ், ஐடியா, லூப் டெலிகாம், எடி சாலட், வீடியோ கான் உள்ளிட்ட 11 பெரிய நிறுவனங்கள் எப்படியெல்லாம் விதிமுறைகளை மீறியுள்ளன என்று விளக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட 11 நிறுவனங்களின் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸையும் ரத்து செய்வது குறித்து அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் இந்த நிறுவனங்கள் தங்கள் பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மேலும் மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் ட்ராய்க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ட்ராய்க்கு கண்டனம்:
தங்களது இந்த உத்தரவில் ட்ராயின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் நீதிபதிகள்.
"வோடஃபோன், யூனிநார், எஸ்ஸார் சவுத், ஷ்யாம் டெலிலிங்க், டாடா டெலி சர்வீஸஸ், ஐடியா, லூப் டெலிகாம், எடி சாலட், வீடியோ கான் உள்ளிட்ட 11 நிறுவனங்களும் அடிப்படை விதிகளைக் கூட பூர்த்தி செய்யாமல் ஏலம் கேட்டுள்ளன. ஆனால் அவற்றை குறைந்தபட்சம் பரிசீலிக்கக் கூட முயற்சிக்காதது ஏன்? நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் உயர்ந்தபட்ச ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய் (TRAI) என்ன செய்து கொண்டிருந்தது? விதிமுறை மீறல் வெளிவந்த பிறகும் கூட இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
மேலும் இந்த 2 ஜி உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்பது குறித்து விளக்கப்பட வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
2 ஜி விவகாரத்தில் கபில் சிபல் தலையிடக் கூடாது! - சுவாமி
இதற்கிடையே, 2 ஜி விவகாரத்தில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களை காப்பாற்ற அமைச்சர் கபில் சிபல் முயற்சிப்பதாகவும், குறைந்த அபராதம் விதித்து மீண்டும் அந்த நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்கிறார் என்றும் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் அவரது பொது நல வழக்கில் 11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்ட பிறகு அவர் கூறுகையில், "முறைகேடான நிறுவனங்களின் பேச்சாளர் மாதிரி அமைச்சர் கபில் சிபல் பேசுகிறார். பெயருக்கு குறைந்த அபராதம் போட்டு யூனிநார், லூப் டெல் போன்ற நிறுவனங்களை மீண்டும் செயல்பட அனுமதிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். அதனால்தான் 2 ஜி இழப்புத் தொகையை அவர் குறைத்துக் காட்டுகிறார்.
இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அறிக்கையை குறை சொன்ன கபில் சிபல் மீது நடவடிக்கை அவசியம். அதைவிட முக்கியம், அவர் இனி 2 ஜி முறைகேடு தொடர்பான விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications