ஜெயலலிதா வீடு முன்பு சேகர்பாபு ஆதரவு அதிமுகவினர் போராட்டம்
சென்னை: வட சென்னையில் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் ஜெயலலிதா வீடு முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் சேகர்பாபு. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்ததால் அவரை பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அப்பொறுப்பில் நியமித்தார். ஆனால் இதை எதிர்த்து சேகர்பாபு ஆதரவாளர்கள் தொடர்ந்து ஜெயலலிதா வீட்டை அவ்வப்போது முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
மேலும், வட சென்னையில் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கும் அளவுக்கும் போய் வருகின்றன. அதேசமயம், சேகர்பாபு திமுகவில் சேரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் இருவரை சமீபத்தில் ஜெயலலிதா நீக்கினார். இதனால் ஆவேசமடைந்தனர் சேகர்பாபு ஆதரவாளர்கள்.
இந்த நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டம் போய் விட்டு மாலையில் ஜெயலலிதா வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆவின் சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவரும் வட சென்னையைக் காப்பாற்றுங்கள், காங்கிரஸ் திமுக அனுதாபகிளுக்கு பதவி தராதே என்று கோரி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா காரைத் துரத்தியபடி சிலர் ஓடி வந்ததால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களில் சிலர் மட்டும் போயஸ் தோட்டத்திற்குள் அழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து மனு பெற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications