சென்னை வியாபாரி செந்தில்குமார் ம.பியில் கடத்தல்-டிஜிபியிடம் குடும்பத்தினர் மனு
சென்னை: சென்னையைச் சேர்ந்த எண்ணை வியாபாரி செந்தில்குமார் மத்தியப் பிரதேசத்தில் கடத்தப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றி வரும் கருணாநிதி என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். இருவரையும் விடுவிக்க ரூ. 1 கோடி தர வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை முகப்பேரில் வசித்து வந்தவர் செந்தில் குமார். நிலக்கடலை மொத்த வியாபாரி. இவரது தந்தை ராமலிங்கம் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள பாஞ்சாநல்லூர் கிராமத்தில் எண்ணை ஆலை வைத்துள்ளார்.
தந்தையின் தொழிலுக்கு செந்தில்குமார் உதவிகரமாக இருந்துள்ளார். தொழில் விஷயமாக அடிக்கடி மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று வந்துள்ளார். கடந்த 4-ந்தேதி அன்று, செந்தில்குமாரும், இவர்களிடம் பணிபுரியும் கருணாநிதி என்பவரும், மத்திய பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
மறுநாள் முகப்பேரில் வசித்து வரும் செந்தில்குமாரின் மனைவிக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசியவன், கருணாநிதி, செந்தில்குமார் இருவரையும் நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். அவர்களை உயிருடன் விட வேண்டும் என்றால் ரூ. 1 கோடி பணம் வேண்டும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளான்.
நிலக்கடலை வியாபாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜய் யாதவ்சிங் என்பவர் செந்தில்குமாரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். லாரி டிரைவரான இவர் அடிக்கடி சென்னைக்கும் வந்து சென்றுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த இவர்தான் செந்தில்குமாரையும், கருணாநிதியையும், மத்திய பிரதேசத்துக்கு வரும்படி அழைத்தார். அதன் பேரில்தான் இருவரும் அங்கு சென்றனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லை.
கருணாநிதி, செந்தில்குமார் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் செந்தில்குமார் வங்கி கணக்கில் இருந்த பணம் மட்டும் ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு வந்ததை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.
கடந்த 3 நாட்களில் செந்தில்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ. 73 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கருணாநிதியும், செந்தில்குமாரும் கடத்தப்பட்டு இருப்பதை உறவினர்கள் உணர்ந்தனர்.
இது தொடர்பாக செந்தில்குமாரின் தந்தை ராமலிங்கம், மனைவி கோமதி, கருணாநிதி மைத்துனர் பிரபாகரன் ஆகியோர் டி.ஜி.பி. லத்திகாசரணை இன்று சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
செய்தியாளர்களிடம் செந்தில்குமாரின் மனைவி கோமதி கூறுகையில், எனது கணவர் கடத்தப்பட்டுள்ளதால் உறவினர்கள் அனைவரும் பீதியில் இருக்கிறோம். எனவே அவரை மீட்டு தருமாறு டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். விஜய்யாதவ்சிங் என்பவர் எனது கணவரை கடத்தி இருக்கிறார் என்றார்.
இந்தக் கடத்தல் குறித்து சென்னை போலீஸார், மத்தியப் பிரதேச டிஜிபிக்குத் தகவல் அனுப்பி, செந்தில்குமாரையும், கருணாநிதியையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications