திமுக-வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் இளைஞர் சான்றோர் காங்கிரஸ் புகார்
மதுரை: திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் சான்றோர் காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை வெளியிட்டது.
அதில், தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தது.
ஆனால், திமுக ஆட்சி ஏற்று ஐந்து வருடம் முடிவடைய உள்ள நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் இலவச நிலத்தை வழங்கியுள்ளதாக திமுக பொய்யான புள்ளி விபரத்தை பரபரப்பி வருகிறது.
உண்மையில் விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலங்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே இலவச நில விநியோக திட்ட புள்ளி விபரங்களில் மோசடியாக இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான விபரங்களை பகிரங்கமாக வெளியிட தமிழக அரசு தயங்குகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நிலம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி வாக்குகள் வாங்கிய அதே பாணியில், தற்போதும் 21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்கும் சேர்த்து திட்டம் தீட்டி பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது மோசடியான செயலாகும். திமுக-வின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது ஆகும். மேலும் இது சட்டவிரோதமான செயலாகும்.
எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிட தடை விதிக்க வேண்டும். மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட திமுக -வின் தேர்தல் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல்கள் இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.