புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: 2 பஞ் தலைவர்கள் மோதல்-போலீசார் குவிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதில் இரு பஞ்சாயத்து தலைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 38 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைகண்ணி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சின்ன ஒப்பனையாள்புரம். கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது முகலிங்கபுரம்.
இதன் அருகே அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை குவளைகண்ணி பஞ்சாயத்தினர் தங்களுக்கு சொந்தம் என்றும், கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்தினர் தங்களுக்கு சொந்தம் என்றும் உரி்மை கொண்டாடினர்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி சின்ன ஒப்பனையாள்புரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் இறந்து விடவே அவரை அங்குள்ள சுடுகாட்டில் புதைக்காமல் பிரச்சனைக்குரிய இடத்தில் புதைக்க கொண்டு வந்தனர். இதையறிநத முகலிங்கபுர மக்கள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் தலைமையில் அங்கு திரண்டு வந்தனர்.
இதே போன்று குவளைகண்ணி பஞ்சாயத்து தலைவர் முத்துபாண்டி தலைமையில் 19 பேர் அங்கு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தகராறில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 38 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications