தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு தமிழர்களம் கடும் கண்டனம்
மதுரை: புதுக்கோட்டை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுகிற பிணங்களை எண்ணிக் கொண்டிருப்பது தான் நமது வேலையா ? கூலிக்கு மாறடிக்கிறவனுக்குக்கூட குருதி கொப்பளிக்குமே! என் சொந்த மக்களின் 535-வது உடல் துடிதுடித்து விழுகிறது.
கடந்த 1947-ம் ஆண்டு என்னைப் பாதுகாப்பதாக வாக்குறுதி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய டெல்லி அரசோ எள்ளளவும் கவலை கொள்ளவில்லை. “பார்த்துச் சுடு" என்று பக்குவமாகச் சொல்கிறது.
தமிழ்நாடு அரசு வழக்கம்போல மனு, எச்சரிக்கை என்று ஓரம் கட்டிக் கொள்கிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி ஐந்து லட்சமாக அறிவிக்கிறது.
டெல்லி அரசு தமிழர்களை தனி ஒரு தேசிய இனமாக மட்டும் பார்க்கவில்லை, தனி ஒரு நாடு என்பது போலவும் அதற்கும் தனக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போலவும்தான் நடந்து கொள்கிறது.
டெல்லியை நம்புவதாலோ அதன் கொத்தடிமையாக இருக்கும் தமிழ்நாடு அரசை நம்புவதாலோ இனி நமக்கு எந்தவித பயனில்லை. இந்திய அரசின் உதவியால் தான் ஈழம் கிடைக்கும் என்றோ தொடர்ந்து இந்திய அரசுக்கு மனு போடுவதால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் படுகொலைகளை சிங்கள அரசு நிறுத்திவிடும் என்றோ இனியும் எண்ணிக் கொண்டு இருப்பது அடி முட்டாள்தனமான சிந்தனையாகி விட்டது.
சிங்களர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தையோ எதிர்ப்பையோ அறிக்கையையோ கடுப்புடனும் துடிப்புடனும் உடனடியாகத் தாவித் தடுக்கிற இந்திய, தமிழக அரசுகள் சொந்த நாட்டு மக்களைக் காக்கைக் குருவிபோல சுட்டுத் தள்ளும் போது எருமை மாட்டில் மழை பெய்தது போல சொரணையற்று இருப்பது வெட்கக்கேடில்லையா? இந்த எருமைப்பாட்டை “ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு" என்று எத்தனைநாட்கள் தான் கட்டியழுவது ?
இந்திய அரசு நமக்கானது அல்ல என்பதைத் டெல்லி ஆட்சியாளர்கள் மேலும் மேலும் நமக்கு மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டு மக்களும் எதிர்வரும் சந்ததியினரும் சரியான மாற்றுக்களைத் தேடுவதே இனி சரித்திரம் நமக்கு விடுகிற சவால்.
போர்க்குற்றவாளியான ராசபக்சேவின் படத்தை இந்திய அரசின் சைனிக் பள்ளிகளின் நாட்காட்டியில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்குகிறார்கள்.
மறுபக்கம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டிற்கு யார் வேட்டு வைப்பது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறதே.
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டும் சிங்கள இனவெறி அரசோடு கைகோர்க்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களனோடு அது கைகோர்த்து நிற்கிறது.
தமிழ்நாடு தனியொரு நாடாக மாறி தனக்கென ஒரு படை, அதிகாரம், கொடி ஆகியவற்றோடு இருந்தால் மட்டுமே இனி தமிழர்களை மாற்றானிடமிருந்து காப்பாற்ற இயலும் என்பதை நாம் அறிவித்தே ஆக வேண்டும். சமநிலையோடு சிந்திக்கிற எவரும் இனி தமிழ்நாட்டுக்குத் தனிநாட்டு உரிமையன்றி வேறேதும் சிந்திக்க மறுப்பர்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications