மாற்றுத் திறனாளி ரயில் பாஸை திருடிய அதிமுக நிர்வாகி!
ஈரோடு: மாற்றுத் திறனாளி ரயில் பாசை பயன்படுத்தி மோசடி செய்த அம்மாபேட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.ஆர்.சந்திரசேகரன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொரப்பட்டுள்ளது.
ஈரோடு அம்மாபேட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.ஆர். சந்திரசேகரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்ற மாற்றுத் திறனாளிக்கான இலவச ரயில் பாசை சட்ட விரோதமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு, சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் சந்திரசேகரன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி முன்ஜாமீன் கோரி என்.ஆர். சந்திரசேகரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அருணாஜெகதீசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி தனது உத்தரவில்,
இது பொய் புகார் என்று மனுவில் என்.ஆர்.சந்திரசேகரன் கூறி உள்ளார். மனுதாரர் சரவணன் முன் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளார்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.ஆர்.சந்திரசேகரன் காணாமல் போன எனது மாற்றுத் திறனாளிக்கான ரயில் பாசை தவறாக பயன்படுத்தி ரயில்வே துறையை ஏமாற்றி உள்ளார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
எனவே, இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என எதிர்மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் என்.ஆர்.சந்திரசேகரன் முன்ஜாமீன் குறித்து பதில் அளிக்குமாறு ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications