சமாதானப் பேச்சு நடத்தலாம்-எஸ்.எம்.எஸ். மூலம் மமதாவை அழைக்கும் சிபிஎம்
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரினமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே நடக்கும் மோதல் குறித்து பேசித் தீர்க்கலாம் என்று கூறி திரினமூல் காங்கிரஸ் தலைவரான ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.எம்.எஸ். மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த எஸ்.எம்.எஸ்.ஸை, முதல்வர் புத்ததேவ் பட்டசார்யாவின் ஒப்புதலுடன் மேற்கு வங்க மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் கெளதம் தேப் அனுப்பியுள்ளார்.
அதில், சமீப காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து நீங்கள் பெரும் மன வருத்தத்துடன் இருப்பதாக அறிகிறோம். இதுதொடர்பாக, இந்த வன்முறையைத் தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். உங்களது விருப்பத்தை தெரிய விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் தேப்.
சமீபத்தில் இந்த மோதல்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், புத்ததேவுக்கும் இடையே கடும் கடிதப் போர் நடந்தது நினைவிருக்கலாம். டெல்லிக்கு வருமாறு ப.சிதம்பரம் விடுத்த அழைப்பை ஏற்கவில்லை புத்ததேவ். இது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து வருகிற 19ம் தேதி சந்திப்பதாக சிதம்பரத்திற்குத் தகவல் அனுப்பியுள்ளார் புத்ததேவ்.
இதற்கிடையே, லால்கர் மாவட்டத்தில் நேத்தாய் கிராமத்தில் சிபிஎம் தொண்டர்களால் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்கு மாநில ஆளுநர் எம்.கே.நாராயணன் செல்லவுள்ளார்.












Click it and Unblock the Notifications