தமிழக மேல்-சபை தேர்தல் நடத்தக் கூடாது: தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக மனு
டெல்லி: இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மேல் சபைக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியிடம் அதிமுக எம்.பி.க்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் தம்பிதுரை தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், பாலகங்கா ஆகியோர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, ஆணையர்கள் சம்பத், பிரம்மா ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார்கள்.
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் மேல் சபைக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது,
தற்போதைய தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்னும் 3 மாதங்களிலும், உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் 6 மாதங்களிலும் முடிவடைகிறது. இந்த நேரத்தில் அவர்கள் மூலம் மேல் சபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதில் நியாயம் இல்லை. மேலும், அது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.
தமிழக மேல் சபையில் ஒரு சிலருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்ககாகத் தான் திமுக உடனே தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேல் சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் இன்னும் முழுமையாக சேர்க்கவில்லை.
இது வரை 5 முதல் 10 சதவிகிதம் பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் மேல் சபைக்கு தேர்தல் நடந்தால் அதில் பல தில்லுமுல்லு நடக்கும் வாயப்பு உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையரும் மற்ற ஆணையர்களும் நாங்கள் தெரிவித்ததை கவனமாக கேட்டார்கள். மேலும் இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications