நெல்லையில் பொங்கல் விற்பனை களைகட்டியது: கரும்பு விற்பனை ஜோர்
நெல்லை: நெல்லையில் பொங்கல் பண்டிகைக்கான வியாபாரம் களை கட்டியுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லையில் பொங்கலையொட்டி கரும்பு விற்பனை களை கட்டியுள்ளது. தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு லாரிகள் மூலம் கரும்புகள் வந்து குவிந்துள்ளன.
பாளை மார்க்கெட், டவுன் ரதவீதிகள், ஜன்க்ஷன் பகுதிகளில் கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. பாளை மார்க்கெட் மைதானத்தில் கரும்பு விற்பனைக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை அதிகமாக உள்ளது. ஒரு கரும்பு ரூ.20க்கும், 15 எண்ணம் கொண்ட கரும்பு கட்டு ரூ.200 முதல் 250 வரையும் விற்பனையாகிறது. பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக வேன் மற்றும் கார்களில் வந்து கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர். இதே போல் பாத்திரக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டக்கூடும் என்பதற்காகவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாளை மார்க்கெட், டவுன் பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்த வண்ணம் உள்ளனர். மாநகர துணை கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல் நிலையங்களில் போலீஸ் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை மற்றும் ஆயுதப்படை பிரிவில் இருந்து 500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணியி்ல் ஈடுபடுவதற்காக கூடுதல் வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது.
டெங்கோ என்ற சிறிய வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. சிறிய சந்துகளில் பிரச்சனை நடந்தால் உடனே அங்கு செல்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications