தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் ஆழ்வார்கள்-ஆர்.எம்.வீரப்பன்

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் மார்கழிப் பெருவிழா, மங்கலத் திருவிழா சென்னை தியாகராயநகர் சர்.பி.டி.தியாகராசர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் வீரப்பன் பேசுகையில்,
வைணவ திருவிழாவாக இருக்கிறதே... இதற்கு எப்படி ஆர்.எம்.வீரப்பன் தலைவராக இருக்கிறார் என்று பலர் எண்ணக்கூடும். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டபோதே இந்த ஆழ்வார்கள் ஆய்வு மையத்தை நான்தான் தொடங்குவதற்கு காரணமாக இருந்தேன். அன்று முதல் தலைவராக இருக்கிறேன். ஆழ்வார்கள் மையம் மட்டும் அல்ல, இது ஆழ்வார்கள் ஆய்வு மையம். ஆகவேதான் இங்கே மார்கழி பெருவிழாவும் நடைபெறுகிறது, விருது வழங்கும் விழாவும், கலைஞருக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது.
ஆழ்வார்கள் என்பவர்கள் தமிழகத்தில் வைணவத்திற்காக பாடுபட்டவர்கள். அதைவிட அருமையான தமிழை பொழிந்தவர்கள். தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் ஆழ்வார்கள். தமிழ் இன்றைக்கு செம்மொழியாக இருக்கிறது. முதல்வர் கருணாநிதி காலத்தில் செம்மொழியானது மட்டுமல்ல, அதற்காக உலகம் பாராட்டும் ஒரு தகுதியும் பெற்று, இன்றைக்கு தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சமய இலக்கியங்களை நமக்கு தந்துவிட்டு சென்றவர்கள் தமிழ் வளர்ப்பதற்கு காரணமாக இருந்தார்கள். சிறந்த இலக்கியங்களை தந்ததினாலேதான் தமிழ் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆழ்வார் ஆய்வு மையத்தில் இறைவனை வணங்குவதற்கு மட்டும் ஈடுபடவில்லை. இறைவன் பெயரால் மக்களை நெறிப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும், அதன் மூலம் தாய்மொழியை வளர்ப்பதற்கும், நல்ல பண்புகளை உருவாக்குவதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கின்றன.
மனித நல்வாழ்க்கைக்கு ஏற்ற எல்லா நற்பணிகளிலும் யார் ஈடுபடுகின்றார்களோ அவர்களை எல்லாம் பாராட்ட வேண்டும், வளர்க்க வேண்டும் என்கிற அளவிலேதான் என்னை போன்றவர்கள் எல்லாம் இதிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். முதல்வர் கருணாநிதி, ஜெகத்ரட்சகனை கூப்பிடுங்கள் என்று சொல்வது இல்லை..ஆழ்வாரை கூப்பிடு என்றுதான் சொல்கிறார். கலைஞர் வாயில் இருந்தும் அடிக்கடி ஆழ்வார் என்ற பெயர் வருவதற்கு காரணமாக இருக்கும் ஜெகத்ரட்சகனை வாழ்த்தி பாராட்டுகிறேன் என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலாளருமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவராகவும் என்னை வழிநடத்துகிற, எனது ஞானத் தந்தையாகவும் ஆ.எம்.வீரப்பன் திகழ்கிறார். அவருக்கு நான் தொண்டராக இருந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த விழாவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். நல்ல அறிஞர்களை தேர்வு செய்வதில் ஆர்.எம்.வீரப்பனை விட்டால் உலகத்தில் வேறு யாரும் கிடையாது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாத நேரத்திலே அவரை தேர்வு செய்து ஆர்.எம்.வீரப்பன் விருது வழங்கி உள்ளார். இன்று நடமாடும் தமிழாக நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற முதல்வர் கருணாநிதிக்கு ராமானுஜம் விருது தந்த பெருமை ஆர்.எம்.வீரப்பனைத்தான் சேரும்.
ராமானுஜருக்கு 2017-ம் ஆண்டு ஆயிரமாவது ஆண்டுவிழா. இதையொட்டி பெரிய மண்டபத்தை ஸ்ரீபெரும்புதூரில் கட்டச்சொல்லி எனக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். அந்த பணியையும் நான் செய்ய உள்ளேன்.
முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு செய்து இருப்பதுபோல உலகத்தில் உள்ள எந்த அரசும் இதுவரை செய்ததில்லை. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் எத்தனை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறார். இப்போது கோவிலுக்கு சென்றால் பக்தர்கள் பரவசப்படுகிற அளவுக்கு எவ்வளவு சுத்தமாக, எவ்வளவு நேர்த்தியாக உள்ளது. எல்லா இடங்களிலும் ஆன்மீகத்தை மிகவும் அருமையாக செழுமையாக முதல்வர் கருணாநிதி செய்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்டோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications