ம.பியில் கடத்தப்பட்டு 12 நாள் சிறை வைக்கப்பட்ட 2 தமிழக வியாபாரிகள் மீட்பு-5 கொள்ளையர்கள் கைது
சென்னை: மத்திய பிரதேசத்தில் கடத்தப்பட்டு, ரூ. 1 கோடி கேட்டு பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழக வியாபாரிகள் 12 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 2 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த நிலக்கடலை வியாபாரி செந்தில்குமாரும் மன்னார்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரும் கடந்த 2ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு வியாபார விஷயமாகச் சென்றனர். ஆனால், 4ம் தேதி முதல் இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தன.
இந் நிலையில் செந்தில்குமாரின் சகோதரரிடம் பேசிய ஒரு கும்பல் இருவரையும் தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய ரூ. 1 கோடி பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியது.
பின்னர் இந்தக் கும்பல் பிணைய தொகையை ரூ. 50 லட்சம், ரூ. 35 லட்சம் என்று படிப்படியாக குறைத்து பேரம் பேசி வந்தது.
அதே நேரத்தில் செந்தில்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் தினமும் பணம் எடுக்கப்பட்டு வந்தது. நான்கு நாட்களில் ரூ.70,000 வரை பணம் எடுக்கப்பட்டது.
இது குறித்து செந்தில்குமாரின் மனைவி கோமதி மற்றும் கருணாநிதியின் உறவினர் பிரபாகரன் ஆகியோர் தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செயலாளர் மோகன் ஆகியோர் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுடன் சென்று தமிழக முதல்வர் கருணாநிதியின் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
இதையடுத்து இருவரையும் மீட்க மத்திய பிரதேச போலீஸாரின் உதவியை தமிழக போலீசார் நாடினர். மேலும் ஒரு தனிப்படையும் அங்கு அனுப்பி விரைந்தது.
இந் நிலையில் நேற்று மாலை இரு வியாபாரிகளும் மீட்கப்பட்டனர்.
இவர்களை மத்திய பிரதேச போலீசார், சிபிஐ துணையுடன் மீட்டதாகத் தெரிகிறது. இவர்களை கடத்தி வைத்திருந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் கடத்தல் கும்பலின் தலைவன் மற்றும் இந்த இருவரையும் அக்கும்பலிடம் விலைக்கு விற்ற லாரி டிரைவர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வியாபாரிகளை லாரி டிரைவர் விஜய் யாதவ் என்பவர் பணத்துக்காக கடத்தல் கும்பலிடம் விற்றதும் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் செந்தில்குமார்,கருணாநிதிக்கு லாரி டிரைவர் விஜய் யாதவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து நிலக்கடலையை தமிழ்நாட்டிற்கு லாரியில் அனுப்பி வைப்பது தொடர்பான உதவிகளை விஜய் யாதவ் செய்து கொடுத்துள்ளார்.
இந் நிலையில் அவர் சொன்னதை நம்பி கடந்த 3ம் தேதி குவாலியரில் விஜய் யாதவ் சொன்ன இடத்திற்கு தமிழக வியாபாரிகள் இருவரும் சென்றுள்ளனர். குவாலியரில் உள்ள ஒரு விடுதியில் இந்த இருவரையும் யாதவ் தங்க வைத்துள்ளார். அவர்களிடம் மொத்த வியாபாரிகள் வந்து உங்களை சந்திப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அங்கு வந்த சிலர் இந்த இருவரையும் காரில் அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந் நிலையில் 12 நாட்களுக்குப் பின் இருவரும் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நிலக்கடலை வியாபாரி செந்தில்குமார் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் சீறிய முயற்சியால் நாங்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளோம். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications