இலங்கை கடற் பகுதியில் பதற்றமான சூழ்நிலை-ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல், ஜனவரி 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் பாண்டியனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1974ம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமையையும், அங்கு வலைகளை உலர வைப்பதற்கான உரிமையையும் தமிழக மீனவர்கள் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் மீறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லாத அளவுக்கு ஒரு பதற்றமான சூழ்நிலை இலங்கை கடற் பகுதியில் நிலவுகிறது.
இந்த பதற்றமான சூழ்நிலையை தணிக்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது. மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய கருணாநிதி, இது போன்று சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் 'கடிதம் எழுதுவது", 'உண்ணாவிரதம் இருப்பது" என தனது பணியை முடித்துக் கொள்வார்.
12ம் தேதி நடந்த மீனவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து பிரதமருக்கு தந்தி அனுப்பிவிட்டு தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் உரையாடினாரா என்று இலங்கை அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு, 'இல்லை" என்று அவர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு சென்று இருக்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, இந்திய மீனவர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்களை தடுக்கக்கூடிய வல்லமை மத்திய அரசுக்கு இல்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கருணாநிதிக்கு தக்கப் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications