செங்கல்பட்டு-எஐவி பாதித்த தம்பதி, 4 குழந்தைகளை உயிருடன் கொளுத்த முயற்சி!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே எச்ஐவி பாதித்த தம்பதியையும், அவர்களது இரு குழந்தைகள் மற்றும் 2 உறவுக்கார குழந்தைகளை உயிருடன் குடும்பத்தோடு தீவைத்துக் கொளுத்த முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (41), இவரது மனைவி காஞ்சனா (36). இருவரும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். எச்ஐவி பாதித்த நீங்கள் ஊருக்குள் இருக்கக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் தொடர்ந்து ராதாகிருஷ்ணனை தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன், காஞ்சனா, அவர்களது இரு மகள்கள் மற்றும் இரு உறவுக்கார குழந்தைகள் தங்களது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது குடிசைக்குத் தீவைக்கப்பட்டது. தீ பரவியதைப் பார்த்து ராதாகிருஷ்ணன் தனது குடும்பதோடு வெளியே ஓடி உயிர் தப்பினார்.
இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், திருமணி பஞ்சாயத்துத் தலைவர் ராஜகோபால்தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை ராஜகோபால் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து காஞ்சனா கூறுகையில், நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம். நாங்கள் இதுவரை பலமுறை வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம். செங்கல்பட்டில் வாடகை வீடுகளில் குடியிருந்தபோது எங்களது நோய் தெரிந்து வீட்டுக்காரர்கள் உடனடியாக வெளியேற்றி விடுவார்கள். இப்போது எங்களை உயிருடன் தீவைத்துக் கொளுத்த முயன்றுள்ளனர் என்றார் கண்ணீர் மல்க.
ராதாகிருஷ்ணன் கூறுகையில், அதிகாலை இரண்டரை மணி இருக்கும். அப்போது எனது குடிசைக்கு தீவைத்துள்ளனர். தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் நான் உடனே எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியேறி தப்பினேன். இதில் எனது நெற்றியில் காயம் ஏற்பட்டு விட்டது. எனது 2 வயது மகள் ஜெமிமுவுக்கு வயிற்றில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது தங்களது உறவினர் ஒருவரது வீட்டில் இந்தத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ராதாகிருஷ்ணனும், காஞ்சனாவும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபாலிடம் சம்பவம் குறித்து கேட்டதற்கு, அப்படியா, எனக்குத் தெரிந்து, எனது ஊரில் எந்த குடிசையும் எரியவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே என்று படு கேஷுவலாக கூறினார்.












Click it and Unblock the Notifications