பிரதீபாவை சந்திக்கிறார் மன்மோகன்-அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை?

அமைச்சரவையில் பெரும் மாற்றம் வரவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் அடிபட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3வது வாரத்தில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் அடுத்த 2 நாட்களில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் 2 முறை பிரதமருடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து இருவரும் இறுதி செய்ததாக தெரிகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் மன்மோகன் சிங் தலைமையில் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அதன் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை மாற்றம் தவிர காங்கிரஸ் கட்சி மட்டத்திலும் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அழைக்கவுள்ளார் சோனியா. சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளது. சில அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படவும் உள்ளது.
தற்போது மத்திய அமைச்சரவையில் சட்டீஸ்கர், கோவா, மணிப்பூருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே இந்த முறை அது சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய அமைச்சரவை மாற்றத்தில் திமுகவின் ராசா வசம் இருந்த தொலைத் தொடர்புத்துறை யாரிடம் வழங்கப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்தத் துறை மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல ராசாவின் ராஜினாமாவால் காலியான கேபினட் அமைச்சர் பதவி திமுகவைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு தரப்படலாம் என்றும் தெரிகிறது. இந்தப் பதவியை டி.ஆர்.பாலுக்குத் தர முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications