2006 முதல் ஜார்கண்டில் அழுகிக் கொண்டிருக்கும் 6 ஆயிரம் குவிண்டால் தானியங்கள்
ராஞ்சி: நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விஷமாய் ஏறிக்கொண்டிருக்கையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஜார்கண்ட் மாநில உணவுக் கழகத்தின் குடோனில் 6 ஆயிரம் குவிண்டால் உணவுதானியங்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன. இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 5 ஆயிரம் குவிண்டால் கோதுமையும், ஆயிரம் குவிண்டால் அரிசியும் ரான்ச்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில உணவுக் கழக குடோனில் அழுகிக் கொண்டிருக்கிறது. இவை வேலைக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக பயன்படுத்த வேண்டியவை. ஆனால் பயன்படுத்தாமல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் அங்கேயே அழுகுகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த வார துவக்கத்தில் தாணிய இருப்பு குறி்த்து சரிபார்த்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இவற்றை எங்காவது அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனதாகவும் தெரிகிறது.
இது ஒரு முக்கியமான விவகாரம் ஆகும். விசாரணைக்குப்பின் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் மதுரா மஹதோ நிருபர்களிடம் கூறினார்.
பீகாரில் இருந்து பிரிந்து ஜார்கண்ட் கடந்த 10 ஆண்டுகளாக தனி மாநிலமாக இருந்தாலும், அதன் உணவுக் கழகம் இன்னும் பீகார் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
ஜார்கண்ட் மக்கள் தொகையில் 54 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications