காணும் பொங்கலையொட்டி வந்த கூட்டத்தால் குப்பையான மெரீனா
காணும் பொங்கலையொட்டி மெரீனா கடற்கரைக்கு வந்து குவிந்த கூட்டத்தால் கடற்கரையே பெரும் குப்பைக் காடாகிப் போனது.
ஜனவரி 17ம் தேதியான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. சென்னையில் இது விமரிசையாக இருந்தது. இதையொட்டி மெரீனா கடற்கரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து குவிந்து விட்டனர். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்கள் வந்து போன பின்னர் கடற்கரையே குப்பைக் காடாகியது. இவற்றை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது.
இந்தப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 5 லட்சம், எலியட்ஸ் கடற்கரையில் சுமார் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் மக்கள் கடற்கரைப் பகுதியில் குழுமியிருந்தனர். இதனால் கடற்கரை மணல் பகுதியில் உள்ள குப்பைகளை சென்னை மாநகராட்சி சுமார் 440 நபர்களை பயன்படுத்தி அகற்றி வருகிறது.
நேற்றும், இன்றும் மெரினா கடற்கரையில் சுமார் 150 டன் குப்பைகள், எலியட்ஸ் கடற்கரை, பூங்காக்கள் ஆகிய சுற்றுலா பகுதிகளில் 100 டன் குப்பைகள் என மொத்தம் 250 டன் குப்பைகள் அகற்றப்படுகிறது.
இதற்காக சென்னை மாநகராட்சி கடற்கரைப்பகுதியில் உள்ள நடைபாதைகளை தூய்மைப்படுத்துவதற்காக தானியங்கி இயந்திர வாகனமும், கடற்கரையில் உள்ள மணல்களை தூய்மைப்படுத்துவதற்கான வாகனமும் பயன்படுத்தப்பட்டு குப்பைகள் அகற்றப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குப்பைகளை போடுவதற்காக ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன 120 தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. ஒரு தொட்டியின் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வரை ஆகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications