பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு நியாயப்படுத்த முடியாது-வைகோ
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.54 உயர்த்தி இருக்கின்ற மத்திய அரசின் நடவடிக்கையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
2004ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 37.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 26.28 ஆகவும் இருந்தன. தற்போது 2011ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 63.38 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 42.00 ஆகவும் அதிகரித்து விட்டது. ஆறே ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் விலை 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மத்திய அரசு காரணம் காட்டுகிறது. ஆனால், 2004ல் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 35 டாலராக இருந்து, 2008ல் 147 டாலராக உயர்ந்தது. அதன்பின்னர் விலைச் சரிவு ஏற்பட்டு 2009ல் 41 டாலராகக் குறைந்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திட முன்வராத மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுவதை ஏற்க முடியாது.
பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மத்திய அரசு விலகிக் கொண்டதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி, கடந்த ஆறு மாதங்களில் ஏழு முறை பெட்ரோல் விலையை லிட்டருக்குச் சுமார் ரூ. 11.00 அளவுக்கு உயர்த்தி இருக்கின்றன.
விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காதுப் போய்க் கொண்டிருக்கிறது. உணவுப் பொருள்கள், காய்கறிகள் விலை தங்கள், வெள்ளி விலையுடன் போட்டிப் போட்டு உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பொறுப்பற்ற தன்மையுடன் செயல்படுவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications