நான் ராஜினாமா செய்வதாக சொல்லவேயில்லையே-அமைச்சர் அழகிரி

திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வேண்டும் என்று அழகிரி கோரி வருவதாக தெரிகிறது. இதை வலியுறுத்தியும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை கட்சியை விட்டு நீக்கக் கோரியும் முதல்வரிடம் சமீபத்தில்அழகிரி கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதை செய்ய இயலாவிட்டால் தான் கட்சி மற்றும் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும் அழகிரி தன்னிடம் ராஜினாமா கடிதம் எதையும் தரவில்லை என்று முதல்வர் மறுத்து விட்டார். அதேசமயம், கனிமொழியை வெகுவாகப் பாராட்டி ஒரு நிகழ்ச்சியிலும் பேசினார். கனிமொழி ஏற்பாடு செய்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியிலும்அவர் கலந்து கொண்டார். இதன் மூலம் அழகிரிக்கு மறைமுகமாக தனது பதிலை முதல்வர் தெரிவித்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில், நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இன்று அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரி, முதல்வரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அழகிரி டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து கருணாநிதியுடனான சந்திப்பு குறித்தும், அவரது ராஜினாமா குறித்த செய்தி தொடர்பாகவும் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அழகிரி,
நான் ராஜினாமா செய்யப்போவதாக வந்த தகவல் பற்றி எனது தந்தையும், திமுக தலைவருமான மு.கருணாநிதி ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். பதவி கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. அவர்களாக கொடு்த்தால் அதை ஏற்றுக் கொண்டு கட்சிக்காக பாடுபடுவேன் என்றார்.
மாற்றியமைக்கப்டும் மத்திய அமைச்சரவையில் திமுக வேட்பாளர்கள் இருப்பார்களா, இல்லையா என்று கேட்டதற்கு அவர் அது பற்றி கூறுவதற்கு நான் ஒன்றும் பிரதமர் கிடையாதே என்றார்.
2ஜி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் அ. ராசா மீது நான் எந்தவித கட்சி நடவடிக்கையும் எடுக்கச் சொல்லி வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications