செக் இல்லாமல் பைக் கடன்: ஹீரோ ஹோண்டாவுக்கு பஜாஜ் 'செக்'

நாட்டின் பைக் உற்பத்தியில், இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ் நிறுவனம்,தனது தயாரிப்புகளுக்கு, சொந்த நிதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் மூலம் கடன் வழங்குகிறது. இதற்காக,வாடிக்கையாளர்களிடமிருந்து அடையாள ஆவணங்கள், மாத தவணைகளுக்கான வங்கி செக்குகள் ஆகியவை பெறப்படுகின்றன.
இந்நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் விற்பனையை அதிகரிக்க, பஜாஜ் நிறுவனம் வங்கி செக் இல்லாமல் பைக் கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதொடர்பாக, பஜாஜ் பைக் விற்பனைப் பிரிவு தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:
விற்பனையை பன்மடங்கு உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் விற்பனையை அதிகரிக்க, சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, விற்பனை மற்றும் கடன் கொள்கைகளில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி,பைக் கடன் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை சேர்ந்தவர்கள் பைக் வாங்கும்போது,இனி வங்கி செக்குகளை வழங்க தேவையில்லை.சிறு விசாரணைக்கு பின் நம்பிக்கையின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். வாடிக்கையாளர்களிடமிருந்து மாத தவணைகள் நேரில் பணமாக வசூலிக்கப்படும்.
விவசாயம் சார்ந்த பகுதிகளில்,அறுவடை சமயங்களில்,கடனை செலுத்தும் வகையில் சிறப்பு மாத தவணை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் சில பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிக அளவில் புதிய டீலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்திட்டங்கள் மூலம், பைக் விற்பனை சந்தையில் பஜாஜ் பைக்குகளின் விற்பனை 30சதவீதத்திற்கு மேல் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
பஜாஜ் நிறுவனத்தின் புதிய திட்டங்களால்,பைக் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ஹீரோ ஹோண்டாவின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என பைக் விற்பனை சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications