திருவாரூரில் மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை-கடைகள் அடைப்பு-பதட்டம்

Subscribe to Oneindia Tamil

திரூவாரூர்: திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்ட செயலாளர் நாவலன் படு‌கொலை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது.

திவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தவர் நாவலன்.

திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தி்முக -வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை தடுக்க பல்வேறு வழிகளில் நாவலன் முயன்றுள்ளார். இதனால் வருமானம் பாதிக்கப்படுகின்றதே என சாராயக்கும்பல் நாலவன் மீது கடும் கோபத்தில் இருந்தது.

இந்த நிலையில் சாராயம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதை தடுக்க நாவலன் முயன்றுள்ளார். அதனால் ஏற்பட்ட மோதலில் அவர் படு்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது.

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரோந்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீசி சிலர் தாக்கினர். இதில் 5 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.

22ம் தேதி சிபிஎம் ஆர்ப்பாட்டம்:

நாவலன் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து 22ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளருமான தோழர் ஜே.நாவலன் (54) புதனன்று (19.1.2011) இரவு சுமார் 7 மணி அளவில் சமூக விரோத, கள்ளச்சாராய கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள சமூக விரோத கும்பலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. தமிழக அரசும், காவல்துறையும் சமூக விரோதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில் தோழர் நாவலன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக விரோத கும்பலின் இந்த கொடூர கொலை வெறியாட்டத்தை மார்க்சிளிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனவரி 19 அன்று நாகை மாவட்டம் திருமெய்ஞானபுரம் தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்று, அவரும் பேரளம் பேரூராட்சி உறுப்பினர் ராஜாவும் இருசக்கர வாகனத்தில் பேரளம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, கொட்டூர் மாங்குடி கிராமத்திற்கு அருகில் தோழர் நாவலனையும், ராஜாவையும் கள்ளச்சாராய சமூக விரோத கும்பல் இடைமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. வெட்டுக்காயங்களுடன் குடிசை வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்த நாவலனை குடிசைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

தோழர் நாவலனின் சொந்த ஊரான திருமெச்சூர் பகுதியில் கள்ளச்சாராய கும்பலின் சமூக விரோத செயல்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. கள்ளச்சாராய கும்பலின் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி காவல்துறையில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தோழர் நாவலனுக்கு வந்த கொலை மிரட்டல்கள் மற்றும் அப்பகுதியில் கூலிப்படையினர் முகாமிட்டிருப்பது குறித்தும் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தப்புகார்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கள்ளச்சாராய கும்பலுக்கு துணை நிற்கும் வகையில் தோழர் நாவலன் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் மீதே காவல்துறை பொய் வழக்கு புனைந்தது. இந்தப் பின்னணியில் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

கடந்த ஆண்டில் (மார்ச் 2010)நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் எங்கள் கட்சியின் கிளைச்செயலாளர் தோழர் சி.வேலுச்சாமி (வயது 38) கந்துவட்டி கொடுமையை எதிர்த்து போராடிய போது, கந்துவட்டி, சமூக விரோத கும்பல் மீது புகார் கொடுத்தும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் படுகொலை செய்யப்பட்டார். தமிழக அரசும், காவல்துறையும் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகளை தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுக்காததின் காரணமாகவே மேற்கண்ட கொடூர கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே, தோழர் நாவலனை படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், சமூக விரோதிகளுக்கு துணை நிற்கும் காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழர் நாவலனுக்கு வசந்தா என்ற மனைவியும், லெனின், ஸ்டாலின் என இரு மகன்களும், செங்கொடி, செம்மலர் ஆகிய மகள்களும் உள்ளனர். தோழர் வசந்தா ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னணி ஊழியராக பணியாற்றி வருபவர். தோழர் நாவலனின் இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். தோழர் நாவலனின் இழப்பால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், கட்சிக்தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் நாவலன் படுகொலையைக் கண்டித்தும், படுகொலைக்கு காரணமான சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் 2011, ஜனவரி 22 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகர் மற்றும் முக்கிய மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மாவட்டக்குழுக்களை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+