போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை: டி.ஜி.பி. விளக்கம்
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை என்று டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லத்திகா சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடியால் அடித்ததாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியி்ட்டுள்ளன.
அந்த செய்தியைப் பார்த்த முதல்வர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையிடம் இருந்து விவரம் கேட்டுத் தனக்கு தெரிவிக்குமாறு தலைமை செயலாளரிடமும், உள்துறை செயலாளரிடமும் கூறியுள்ளார்.
உடனே போராட்டம் நடத்தியவர்கள் மீது எதற்காக தடியடி நடத்தப்பட்டது என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விசாரிக்கப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் மற்றும் மத்திய அரசு என்று எழுதப்பட்டிருந்த கொடும்பாவிகளை எரித்தனர். மேலும், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு மறியலில் ஈடுபட்டனர்.
அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் தான் போலீசார் அவர்களை கலைந்து போகும்படி செய்தனர் என்று ஆணையர் தெரிவித்தார்.
அவ்வாறு அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தி ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அப்போது பத்திரிக்கைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் இத்தனையும் செய்யும் வரை காவல் துறை எங்கே போயிருந்தது, ஏன் தடுக்கவில்லை என்று எழுதக் கூடும்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்ததில் அவர்கள் யாரையும் அடிக்கவில்லை என்றும், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க பயமுறுத்தி விரட்டப்பட்டார்கள் என்றும் தெரிய வந்தது.
அப்படி ஒரு தாக்குதல் சம்பவமே நடக்காதபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தாக்குதலும் நடக்கவில்லை, யாரும் காயமடைந்து எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவும் இல்லை என்று ஆணையர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல எதிர் கட்சிகள் சார்பில் போராட்டம் நடக்கின்றது. அவ்வாறு போராட்டம் நடத்துபவர்கள் யார் மீதும் போலீசார் தடியடி நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications