தமிழகத்தில் தைப்பூசம்-முருகன் கோவில்களில் கோலாகலம்
பழனி: தைப்பூசத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் தலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பழனியில் தைப்பூசத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இன்று தைப்பூசமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பழனியில் கடந்த 14ம் தேதி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
பல்வேறு காவடிகளை ஏந்தியபடி பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்துள்ளனர். இன்று மாலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டம், நான்கு ரத வீதிகளிலும் நடைபெறும். அதன் பின்னர் 6 மணியளவில் தெப்போற்சவம் நடைபெறும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல திருச்செந்தூரிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மூன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடத்தப்பட்டது. மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது.
சென்னை வடபழனி, திருப்போரூர் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் தலங்களிலும் இன்று தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications