தெருக்களில் சாக்கடை ஓடுவதால் மதுரை மக்கள் வேதனை-ஜெ.
சென்னை: சாக்கடை நீர் அனைத்து தெருக்களிலும் ஆறாக பெருகி ஓடுவதாகவும் இதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பதாகவும் மதுரை மக்கள் வேதனைப்படுகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயலிலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அன்மையில் போடப்பட்ட சாலைகள் உட்பட முக்கிய சாலைகளும், குறுக்குச் சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மேலும், சிங்கிள் டெண்டர் மூலம் சென்ட்ரல் மார்க்கெட்டில் 109 கடைகள் அளிக்கப்பட்டதில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வரைபட அனுமதி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வரைபட அனுமதி பெறாமல் லஞ்சம் கொடுத்து வீடுகளை கட்டுகின்ற நிலை உள்ளதாகவும் மதுரை மாநகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர ஒரு சதுர அடிக்கு 66 பைசாவாக இருந்த சொத்து வரியை வரியை ரூ. 3ஆக உயர்த்தி மதுரை மாநகராட்சியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணையையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குடிநீர் இணைப்புக் கட்டணம் 1000 ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு விட்டதாகவும், பாதாள சாக்கடைவரி 125 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டு விட்டதாகவும், பாதாள சாக்கடைப் பணி முறையாக செய்யப்படாததன் காரணமாக குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாகவும்,
சாக்கடை நீர் அனைத்து தெருக்களிலும் ஆறாக பெருகி ஓடுவதாகவும் இதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பதாகவும் மதுரை மக்கள் வேதனைப்படுகின்றனர்.
எனவே மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை 10 மணியளவில் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு மாணவர் அணிச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகிப்பார். இந்த ஆர்பாட்டம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications