கொள்ளை நடந்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி, காதலனுடன் கைது
தர்மபுரி: தான் வீட்டில் தனியாக இருந்தபோது தன்னை யாரோ கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 35 சவரன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாக நாடகமாடிய மாணவி, தன்னுடைய காதலுடன் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து நகையும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை திரு.வி.க. தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்( 60). அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.இவரது மனைவி புஷ்பராணி. இவர் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகள் வினோதினி (19). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார் வினோதினி. அவர் வீட்டில் தனியாக இருந்த போது யாரோ மர்ம நபர்கள் அவர் கை, கால்களை கட்டிவிட்டு, வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டி பீரோவில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்தது. இது குறித்து கிருஷ்ணன் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தர்மபுரி டவுன்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோதினியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வினோதினி தனது காதலன் தவமணியிடம் (22) நகை, பணத்தைக் கொடுத்துவிட்டு களவுபோனது போன்று நாடகமாடியது தெரிய வந்தது.
இது தொடர்பாக தவமணி அவருடைய நண்பர்கள் சண்முகம் (27) மணிகண்டன் (24) ஆகியோரையும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவி வினோதினியையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறியதாவது,
தன்னைக் கட்டிப்போட்டு கொள்ளை நடந்ததாகக் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் யாருடனோ அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது. அந்த எண்ணக்குரிய நபரை விசாரித்தில் அவர் பெயர் தவமணி என்றும், அவருக்கு இந்த திருட்டில் முக்கிய பங்கு இருப்பதும் கண்டுபிடித்தோம்.
10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தவமணிக்கும், வினோதினிக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. அவர் ஊரைச் சுற்றி கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். உடனே இருவரும் சேர்ந்து வினோதினி வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து கடனை அடைக்கத் திட்டமிட்டு நாடகமாடியுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 35 பவுன் தங்க நகைகளும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
எப்படியெல்லாம் கிரிமினல்தனமாக இந்தக் காலத்துப் பிள்ளைகள் யோசிக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications