மருத்துவ முகாம்-சோதனை கருவிகள் இல்லாமல் வந்த டாக்டர்கள்
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முகாமில் சோதனை கருவிகள் இல்லாமல் டாக்டர்கள் வந்ததால் மாற்று திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முகாம் செய்துங்கநல்லூரில் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா தலைமை வகித்தார். நலிவுற்றோர் தாசில்தார் நயினால் முன்னிலை வகித்தார். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாற்று திறனாளிகள் ஊனம் 80 சதவீதம் இருந்தால் உடனே ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சான்றிதழ் வழங்க வந்த டாக்டர்கள் எவ்வித உபகரணமும் இல்லாமல் வந்ததால் அவர்களால் ஊனத்தின் தன்மையை அறிய முடியவில்லை.
மேலும் சோதனை கருவி இல்லாததால் முகாமுக்கு வந்த அனைவரும் நாளை 24ம்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மாற்று திறனாளிகள் கூறுகையில், முகாமில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பணத்தையும் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் வந்தோம். ஆனால் இங்கு கண் டாக்டர் வரவில்லை. வநத டாக்டர்களும் சோதனை கருவிகள் கொண்டு வரவில்லை.
தூத்துக்குடிக்கு சென்றுதான் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் இந்த முகாம் எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு இந்த வசதி கூட அதிகாரிகளால் செய்து தர முடியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது என்றனர்.












Click it and Unblock the Notifications