மீனவர் ஜெயக்குமார் படுகொலைக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத ஜெ.-ஸ்பெக்ட்ரம் பிரசாரத்திற்கு அழைப்பு
சென்னை: தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்ட செயலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், 27 ந் தேதி முதல் அடுத்த மாதம் 15 ந்தேதி வரை 20 நாட்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நாள் ஒன்றுக்கு மூன்று ஊராட்சிகள் வீதம் சம்பந்தப்பட்ட மாவட்டக்கழகச்செயலாளரின் மேற்பார்வையில், ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய தெருமுனைக்கூட்டங்கள் மாலை நேரங்களில் நடத்தப்பட வேண்டும். இதே போன்று, பேரூராட்சிகளிலும், நகரங்களிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
இதனையடுத்து, 19.2.2011 அன்று கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டங்கள் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்டமன்றத்தொகுதிக்கழகச்செயலாளர்கள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதி, வட்டக்கழகச்செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சிக்கழகச் செயலாளர்கள், ஊராட்சி கழகச்செயலாளர்கள் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடத்தப்பட வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, நில ஆக்கிரமிப்பு மற்றும் சுவர் விளம்பரங்கள், டிஜிடல் போர்டுகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகிய வற்றின் மூலமாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச்செயலாளர்களும், மாவட்டக்கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய பொதுக்கூட்டங்களில் கழக நிர்வாகிகளும்,
எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறு பான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முக்கியமான பணியில், அனைத்து கழக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மீனவர் ஜெயக்குமார் படுகொலைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுவரை ஜெயலலிதா கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications