இந்துஸ்தானி இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷி மரணம்

88 வயதாகும் ஜோஷி பாரதரத்னா விருது பெற்றவராவார். கடந்த டிசம்பர் 31ம் தேதி வயோதிகம் காரணமாக அவர் புனேயில் உள்ள சஹாயத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றார் ஜோஷி.
கர்நாடக மாநிலம் காடக் நகரில் 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிறந்தவர் ஜோஷி. அவரது குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் 16 பேர். அதில் மூத்தவர் ஜோஷி. காயல் என்ற பாடல் வகையில் நிபுணத்துவும் பெற்றவர். இந்துஸ்தானி இசைப் பரம்பரையில் வந்தவர். பஜன் மற்றும் அபங் பாடல்களிலும் இவர் தலை சிறந்தவர்.
குரு -சிஷ்யப் பரம்பரையுடன் நின்று கொண்டிருந்த காயல் பாடல்களை பிரபலப்படுத்தி வெளியுலகுக்குக் கொண்டு வந்தவர் பீம்சென் ஜோஷி.
1943ம் ஆண்டு ஜோஷி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்குதனது 19வயதில் முதல் முறையாக ரேடியோவில் இந்துஸ்தானி பாடலைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தனது அபாரமான பாடல் திறமையாலும், நிபுணத்துவத்தாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் ஜோஷி.
இவர் 1985ம் ஆண்டு பாடிய மிலே சுர் மேரா துமாரா இசை ஆல்பம் இந்தியா முழுவதும் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்ற பாடலாகும். தேச பக்திப் பாடலான இதில் ஜோஷி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாடி நடித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
திரைப்படங்கள் பலவற்றிலும் கூட பாடியுள்ளார் ஜோஷி. 2002ம் ஆண்டுடன் பாடுவதை நிறுத்திக் கொண்டார் ஜோஷி.












Click it and Unblock the Notifications