தனியார் பால் ஏஜென்டுகளின் ஸ்டிரைக்கால் பாலுக்கு சென்னையில் தட்டுப்பாடு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தனியார் பால் ஏஜென்டுகள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை தடைபட்டது. இனால் ஆவின் பாலைத் தவிர தனியார் பாலை வாங்குவோர் பாதிப்பை சந்தித்தனர்.
தமிழகத்தில் ஆவின் பால் தவிர திருமலா, ஆரோக்கியா, ஹெரிடேஜ் உள்பட பல்வேறு தனியார் நிறுவன பால்களும் விற்பனையாகி வருகின்றன. இவற்றில் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் கலக்கலாம் என்பதால் சாலையோர டீக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் இவற்றைத்தான் பெருமளவில் வாங்குகின்றனர். பொதுமக்களும் இதை வாங்குகின்றனர்.
தனியார் பாலை விட ஆவின் பாலை விலை குறைவாக உள்ளது. இந்த நிலையில் தற்போது திருமலா, ஆரோக்கியா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் திடீரென சமீபத்தில் விலை உயர்வை அதிகரித்தன.
இதற்கு தனியார் பால் ஏஜென்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்குரிய கமிஷன் தொகையை உயர்த்தாமல் பால் விலையை மட்டும் உயர்த்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை வலியுறுத்தி கிட்டத்தட்ட 7000 ஏஜென்டுகள் இன்று பாலை வாங்காமல், விநியோகிக்காமல் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் கடைகளுக்குப் பால் விற்பனை தடைபட்டது.
இதன் காரணமாக தனியார் பால் எதுவும் இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று விற்பனையாகவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆவின் பால் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதுவும் கூட விரைவில் விற்றுப் போனதால் எந்தப் பாலும் இல்லாத நிலை பல பகுதிகளில் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications