பிரதீபா பாட்டீலுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு-கர்நாடக ஆளுநரை திரும்பப் பெறக் கோரிக்கை
டெல்லி: பாஜக தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து, கர்நாடக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறக் கோரி மனு அளித்தனர்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கும், ஆளுநர் பரத்வாஜுக்கும் இடையிலான மோதல் பெரிதாகியுள்ளது. எதியூரப்பா மீது ஊழல் வழக்குகள் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து இன்று வரை அவர் மீது 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதையடுத்து எதியூரப்பா டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் மூத்த பாஜகத லைவர் அத்வானி தலைமையில் பாஜக குழு இன்று பிரதீபா பாட்டீலை சந்தித்து ஆளுநர் மீது சரமாரியான புகார்களைத் தெரிவித்தது. இந்தக் குழுவுடன் கர்நாடகத்தைச் சேர்ந்த 23 பேர் அடங்கிய குழுவும் இடம் பெற்றிருந்தது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, அரசியல் சட்டத்தை அவமதித்துள்ளார் கர்நாடக ஆளுநர். அரசியல் சட்டத்தை தூக்கிப் போட்டுள்ளார். காங்கிரஸின் கைக்கூலியாக அவர் செயல்படுகிறார். பாரபட்சமின்றி செயல்பட வேண்டியவர் ஆளுநர். ஆனால் அவரது நடத்தை அவர் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒருதலைபட்சமாக உள்ளது. அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர் ஒரு போதும் நடக்கவில்லை. நடக்க முயலவில்லை.
கர்நாடகத்தில் நடந்து வருவதையெல்லாம் விளக்கி குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம். ஆளுநரை திரும்பப் பெறக் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
ப.சிதம்பரத்தை சந்திக்க எதியூரப்பா விருப்பம்
இதற்கிடையே, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து கர்நாடக நிலவரம் குறித்து விளக்க விரும்புவதாக எதியூரப்பா தெரிவதி்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக மக்கள், முதல்வர், ஜனநாயக முறையை ஆளுநர் பரத்வாஜ் அவமதித்துள்ளார். பரத்வாஜ் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. அவர் ஆளுநரான நாள் முதலே இப்படித்தான் நடந்து வருகிறார்.
ஆளுநரான பின்னரும் கூட அவர் காங்கிரஸ்காரரைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறார். பாஜக ஆட்சி போக வேண்டும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கமாக உள்ளது.
ஆளுநரின் முடிவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு எதையும் தொடரப் போவதில்லை என்றார்.
நாளை ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம்
இதற்கிடையே, ஆளுநரின் முடிவைக் கண்டித்து நாளை பாஜக சார்பில் பெங்களூரில் ராஜ்பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications