சபரிமலை விபத்து குறித்து நீதி விசாரணை-கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: கடந்த 14-ம் தேதி சபரிமலையில் நடந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 102 பக்தர்கள் பலியான இந்த சம்பவம் குறித்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரிப்பார்.
மகரஜோதியைப் பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் முக்கியத்துவம் குறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அவர் விசாரணை நடத்த ஒரு நீதிபதியை நியமிப்பார் என்று நம்புகிறோம் என கேரள முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார்.
சபரிமலை விபத்து குறித்து முரண்பாடான அறிக்கை சமர்பித்த வனத்துறை மற்றும் தேவசம்போர்டிடம் உயர் நீதிமன்ற பெஞ்ச் ஒன்று விசாரித்து வருகிறது.
அந்த பெஞ்ச் வனத்துறையை தனது அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறும், சபரிமலை கோவிலின் சிறப்பு கமிஷனரிடம் புதிதாக ஒரு அறிக்கை தயாரித்து சமர்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை முடிவை கேரள அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications