ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை-ஒபாமாவை நேரில் சந்தித்து தமிழர்கள் கோரிக்கை

அமெரிக்காவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் இணைந்து வெள்ளை மாளிகை முன்பு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்திற்குப் பின்னர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தது.
அதில் மனித குலத்திற்கு எதிராக மிகப் பெரிய குற்றத்தை இழைத்துள்ளார் ராஜபக்சே. போர்க்குற்றங்களை அவரும், அவரது சகோதரர்களும், அரசும் புரிந்துள்ளன. தற்போது ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். இதைப் பயன்படுத்தி அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபக்சே மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய அளவில் ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமே இதுகுறித்து தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ராஜபக்சே மீது சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 58 காங்கிரஸ் உறுப்பினர்கள் (அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்) வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டனுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 17 செனட் உறுப்பினர்கள் இலங்கையில் நடந்த ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் தாங்கள் இந்தியா சென்றிருந்தபோது நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசும்போது, எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அதை உடனடியாக கண்டிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் உள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறோம்.
இன்று இலங்கையில் நடந்துள்ள மிகப் பெரிய மனித உரிமைகள் குறித்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும்போது அதைத் தட்டிக் கேட்க வேண்டிய, விசாரிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் உள்ளது.
ஆனால் இதை இந்தியா தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இதுகுறித்து பேசவே இந்தியா மறுத்து வருகிறது. இதை கண்டும் காணாமலும் உள்ளது. இது மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழு ஆதரவுடன் நடந்து வருகிறது இந்தியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications