அகமதாபாத்தில் 5 அடுக்கு கட்டிடம் இடிந்து 5 பேர் பலி-7 பேர் காயம்
அகமதாபாத்: அகமதாபாத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த 5 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் உயிர் இழந்தனர்.
கலுபூரில் உள்ள சௌடகர்னி போல் பகுதியில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை திடீர் என்று கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர்.
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டிடம் இடிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர், ஒரு தீயணைப்பு அதிகாரி உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர் என்று அகமதாபாத் நகர தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ராஜேஷ் பட் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடம் குறுகிய சாலையில் அமைந்துள்ளதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளதாலும் மீட்புப் பணிகள் தாமதமாகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.
அவசர கால சேவை ஆம்புலன்ஸ்கள் 5 அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்படுகிறது. விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று துணை முனிசிபல் கமிஷனர் ஐஆர் படேல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications